Posts filed under ‘கட்டுரைகள்’

அரசு பள்ளிகள்:வெட்கப்பட வேண்டும்!


தமிழகத்தில் 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்தான் இப்போதைய பரபரப்பு. தேர்ச்சி கண்டவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். தோல்வி கண்டவர்கள் துவண்டுபோய் வேதனை அடைகிறார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்குக் கல்வி அளிக்கும் “மகத்தான” பணியை ஆற்றும் கடமையுள்ள தமிழக அரசு மகிழவும் வேண்டாம்; வேதனைப்படவும் தேவையில்லை. மாறாக வெட்கப்பட வேண்டும். இது காட்டமான விமர்சனமாகக் கூட இருக்கலாம். வெளிப்படையான மனநிலையில் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். நேற்று வெளியான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் மாநில அளவில் முதல் மூன்று இடத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே. ஆக, முதல் மூன்று இடப் பட்டியலில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இடம்பெறவில்லை. ஏன்? இதற்கு யார் பொறுப்பேற்பது? யார் குற்றவாளி? இந்த நிலைக்கு முதலில் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இரண்டாவதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

மாணவர்களின் நிலைக்கு ஆசிரியர்களையும் அரசையும் குற்றம் சாற்றுவது எந்தவிதத்தில் நியாயம் என்று வினவலாம். என் நினைவில் பதிந்த நிகழ்வை உங்களுக்குச் சொல்கிறேன். அரசு பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர், அவரின் மகனைத் தனியாருக்குச் சொந்தமான மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்திருந்தார். அவரிடம் பேசும்போது, ‘அரசு பள்ளியில் பணியாற்றும் நீங்கள், உங்கள் மகனை அதே பள்ளியில் சேர்த்திருக்கலாமே’ என்றேன். அதற்கு ஆசிரியர் சொன்ன விடை, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ‘அரசு பள்ளிக்கூடத்தில் நண்பகல்வேளை உணவு உண்ணும் போது பன்றிகளும் மாணவர்களும் ஒன்றாக இருக்கும் நிலை உள்ளது. அந்தப் பள்ளியில் என் மகனைச் சேர்த்தால், நான் சரியாகப் படிக்காததற்கு என் அப்பாதான் காரணம் என்று எதிர்காலத்தில் அவன் சொல்வான், அப்பழியை நான் ஏற்க விரும்பவில்லை’ என்றார். ஆசிரியர்கள் உட்படப் படித்தவர்களின் இந்த நிலைதான்.

இந்த நிலையை மாற்ற முயற்சிக்காது வெறுமனே பேசும் இந்த மாதிரி ஆட்களால்தான், 12-ஆம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் ஒரு இடத்தைக்கூட அரசு பள்ளி மாணவர்கள் பெறாததற்குக் காரணம். ‘மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்கள் இடம்பெறவில்லையே’ என்று ஆசிரியர்களிடம் கேட்டால், ‘அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி, அதுங்க திருந்தாதுங்க, யாருக்கு என்ன விதியோ அதுதான் நடக்கும்’ என்று சொல்வார்கள். மாணவர்களுக்குத் தரமான கல்வியைத் தரும் பொறுப்புள்ள ஆசிரியர்கள், மாணவர்களைப்பற்றி நிலையான ஒரு எண்ணத்தை வைத்திருக்கின்றனர். இந்த மனநிலையில் மாற்றம் வராதவரை மாநில அளவில், மாவட்ட அளவிலான பட்டியலில் ஒரு மாணவரின் பெயர்கூட சேராது.
தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் இரண்டு, மூன்று மடங்கு அதிகம்.. புதிதாக எதையும் படிக்காமல் எப்போதோ படித்த பாடத்தை மனப்பாடமாக வகுப்பறையில் ஒப்பித்துவிட்டு நேரத்தை கழிக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அக்கறையின்றி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் போக்கில் மாற்றம் வரவேண்டும். பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் ஏழைகள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். படிக்காமல் வெயிலிலும் மழையிலும் உழைக்கும் நம் வாழ்க்கை குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாது என்று பெற்றோர்கல் அனைவரும் எண்ணுகின்றனர். படிக்காத வறியவர்களின் குழந்தைகள், பள்ளியில் சேர்க்கப்படும்போதே ஏ, பி, சி, டி… சொல்லிக்கொண்டே சேர்வார்களா? இருக்கவே இருக்காது. எதுவும் தெரியாமல் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் கற்பித்து வல்லவர்களாக மாற்றவேண்டும். அதைவிட்டுவிட்டுப் படிக்காத வறியவர்களின் பிள்ளை வளர்ந்த சூழல்தான் சரியில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாற்றுவது எப்படி நியாயமாக இருக்கும். தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அதனை ஏற்று நடத்துகிறவர்களுக்கு எப்படியாவது பாடுபட்டு வெற்றியை அடைய வேண்டும் என்று உள்ள உறுதியுடன் வேலை செய்கின்றனர். அந்த இலக்கையும் அடைகின்றனர்.

தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் கூறும்போது, சென்ற கல்வியாண்டில் நான் கற்பிக்கும் பாடத்தில் நல்ல தேர்ச்சி காட்டினால் மட்டுமே, ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு தேர்வு முடிவு எப்படி இருக்குமோ? அச்சமாக இருக்கிறது என்று சொன்னார். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த அச்சம் சிறிதும் கிடையாது. காரணம், மாணவர்கள் தேர்ச்சி அடைந்தால் என்ன, தேர்ச்சி பெறவில்லை என்றால் என்ன.. எப்படி இருந்தாலும், அரசு அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கி வருகிறது. பள்ளிக்கு வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி, பாடம் கற்பித்தாலும் சரி, கற்பிக்காமல் இருந்தாலும் சரி, மாதந்தோறும் ஊதியம் மட்டும் வாங்கிவிடலாம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு பெறலாம். தனியார் பள்ளி நிருவாகத்தின் கட்டளைக்கு அஞ்சி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் தனியார் ஆசிரியர்களிடம் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பாடம் கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரும். படித்ததற்கு ஊதியம் தருகிறார்கள்.. அந்தப்பணத்தைத் தனியார் பள்ளிகளுக்குக் கட்டணமாகச் செலுத்தி நம் பிள்ளைகளுக்கு மட்டும் தரமான கல்வி கிடைக்கச் செய்கிறோம் என்பதான போக்கை அரசு பள்ளி ஆசிரியர்கள் மாற்றிக்கொள்வார்கள். ஆசிரியர்களின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு கடுமையான சில முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும். அதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் அரசு அலுவலர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது. அரசு பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் பணியாற்றும் பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எண்ணம்.

அடுத்து அரசின் பொறுப்பு என்ன? தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஏறக்குறைய ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இவ்வளவு தொகை செலவிட்டும் ஒருவரைக்கூட மாநிலப் பட்டியலில் இடம்பெறச் செய்யவில்லை. அரசு நிதி ஓதுக்கிச் செலவிட்டுத் திட்டங்களைத் தீட்டினால் மட்டும் போதாது. அந்தத் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியையும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே இருக்கும் இடைவெளியையும் அரசு போக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஒரு கல்வியாண்டின் பாதி ஆண்டுவரை மாணவர்களின் தரத்தை அரசு மதிப்பிட்டு, பெரும் வெற்றிக்கான இலக்கை அடைவதற்குத் தடையாக இருப்பவர்கள் ஆசிரியர்களா? அல்லது மாணவர்களா? என்பதை அறிய வேண்டும். கல்வியில் மாணவர்கள் பின்தங்கியுள்ளதற்கு மாணவர்கள் காரணம் என்றால் அதனைத் தீர்ப்பதற்குப் புதிய திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள்தான் காரணம் என்றால் அத்தகையை ஆசிரியர்களைக் களையெடுக்க வேண்டும். இத்தகைய செயல்களைச் செய்தால் மாணவர்களின் கல்வி மேம்படும்.
இல்லையெனில் தனியாருடன் போட்டிப்போடமுடியாத நிலையில் அரசு பள்ளிகள் இருந்துகொண்டேதான் இருக்கும். குறைந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடையும் மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் அரசு உதவித்தொகை பெறுகிறவர்களாக மட்டுமே இருப்பார்கள்.
முத்தாய்ப்பாக ஒன்று சொல்ல வேண்டுமெனில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்திவரும் சமச்சீர்கல்வியைத் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் இருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும்.
இல்லையெனில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களுக்கான பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் இல்லை என்ற நிலையை எண்ணித் தமிழக அரசு வெட்கப்பட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும்.
(10.5.2008 – தமிழ் ஓசை)

ஒக்ரோபர் 25, 2008 at 8:40 முப பின்னூட்டமொன்றை இடுக

“காவிக்கறை” படியும் தென்னிந்தியா

“2011-இல் இந்து தேசம் உருவாகப் போகிறது. அச்சமயம் இந்தியாவில் உள்ள அனைத்து முசுலிம் தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டிருப்பார்கள் அல்லது செத்திருப்பார்கள். மீதி முசுலிம்கள் மதம் மாறி இந்துக்களாகி இருப்பார்கள். நாடு முழுவதும் இந்துக்கள் மட்டுமே இருப்பார்கள்“- இந்த படுபயங்கரச் சொற்களை உதிர்த்தவர் பாபுபாய் பட்டேல். இவர் குசராத்தில் செயல்பட்டுவரும் பஜ்ரங்கி நவ்சேத்னா அமைப்பின் தலைவர். அயோத்திச் சிக்கல், அதனைத் தொடர்ந்து நடந்த வகுப்புக் கலவரத்தில் முசுலிம்களைக் கொன்று குவித்த போது செய்தியாளர்களிடம் பாபுபாய் இவ்வாறு கூறினார்.

வகுப்புவாத அரசியலுக்கு இடம் தராமல் பல காலம் தென்னிந்தியா இருந்தது. ஆனால், வகுப்புவாத அரசியல் கட்சியான பா... கருநாடகத் தேர்தலில் வெற்றிபெற்று தென்னிந்தியாவில் முதல்முறையாக ஆட்சி அமைக்கிறது. இச்சமயத்தில் பாபுபாய் குறிப்பிட்டுள்ள சொற்கள் மிக முக்கியமானவை. சமூகத்தின் மீது அக்கறைகொண்ட அனைவரும் சிந்திக்க வேண்டியவை. இந்து பண்பாட்டைக் காப்பதாகவும் அதனைத் தூய்மைப்படுத்துவதாகவும் கூறிச் செயல்படுவரும் விசுவ இந்து பரிசத் அமைப்பின் அரசியல் வடிவம்தான் பா... இந்த வகையில் பா..., வி..., மதவெறிகொண்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் கடந்த காலச் செயல்பாடுகளை நாம் நினைவுக்கு கொண்டுவருவோம்.

கடந்த 2002-ஆம் ஆண்டு 27-ஆம் தேதி கோத்ராவில் சபர்மதி விரைவுத் தொடர்வண்டி எஸ்-6 பெட்டி தீப்பிடித்து எரிந்ததில் 59 கரசேவகர்கள் இறந்தனர். இதற்கு முசுலிம்கள்தான் காரணம் என்று முதலில் வதந்தி பரவியது. பின்னர், இது பயங்கரவாதிகளின் சதி என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து குசராத் மாநிலம் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. அங்கு பிப்ரவரி 28- ஆம் தேதி தொடங்கி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இலட்சம் வீடுகள், கடைகள், உடைமைகள் பாழாகின. குல்பர்க் பகுதியில் 5 ஆயிரம் வீடுகள் எரிந்து ஆள் இல்லாமல் ஆன்மா இல்லாமல் கிடக்கின்றன. இந்தத் தாக்குதலில் இருந்து முசுலிம்கள் தப்பித்து வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக சாலைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கருவுற்றிருந்த முசுலிம் பெண்களின் வயிறுகள் கிழிக்கப்பட்டு அரைகுறையாக வளர்ந்திருந்த சிசுக்கள் அழிக்கப்பட்டன. இந்தக் கொடுஞ்செயல்கள் ஏதோ தானாகவே நடந்தவை அல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்டவை. இச்செயல்களில் ஈடுபட்ட இந்து வெறியர்களுக்கு முதலமைச்சர் மோடி தலைமையிலான பா... அரசு உறுதுணையாக இருந்தது.

இந்துத்துவத்தின் ஆய்வுக்களமாக குசராத்தை நிலை நிறுத்தி அங்கு நாயகனாக வளர்க்கப்பட்டவர்தான் இந்த மோடி. இத்தாக்குதலுக்குப் பிறகு அகமதாபாத் உள்ளிட்ட குசராத்தின் பல நகரங்கள் இந்துமுசுலிம் என இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன. கலவரத்தில் தெறித்து ஓடியவர்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். 2002-இல் குடியிருப்புகளை விட்டு விரட்டப்பட்ட 5 ஆயிரம் முசுலிம் குடும்பங்கள் வாழும் 69 குடியிருப்புகள் இன்னும் இருக்கின்றன. ஆனால், அவர்கள் அங்கு வந்து வாழமுடியாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் மோடியைக் கண்டித்தது. அதற்கு விடையளித்த மோடி,. “முகாம்களில் இருந்து முசுலிம்கள் வரமறுப்பது பயத்தால் அல்ல; இப்போதுள்ள இடத்தில் வருமானம் அதிகமாகக் கிடைக்கிறதுஎன்று கூறினார். தான் ஆட்சி செய்யும் பகுதியில் குறிப்பிட்ட ஒருசாரார் மிக மோசமாக நடத்தப்பட்டனர்; நடத்தப்படுகின்றனர் என்ற மனநெருடல் முதலமைச்சராக இருக்கும் மோடிக்குத் துளியளவும் இல்லை. ஏனென்றால் அவருக்குக் கற்பிக்கப்பட்ட பாடம் கற்பிக்கப்பட்டது.

மோடி போன்ற அடிப்படைப் பிற்போக்குவாதிகள் அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சர்களாக இருந்தால் பாபுலால் பட்டேலின் எண்ணம் விரைவில் நிறைவேறும்..பி சட்டமன்றத் தேர்தலின்போது பா.. குறுந்தகடு ஒன்றை வெளியிட்டது. அது குறித்து முறையீடுகள் அதிகமாக வந்ததைத் தொடந்து பா...வின் இந்தியத் தலைவர் இராச்நாத் சிங் மீதும் .பி. மூத்த தலைவர் லால்ஜி தாண்டன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. அக்குறுந்தகட்டின் உள்ளடக்கத்தை இந்தியாவின் அறைகூவல் என்னும் தலைப்பில்தி இந்துநாளிதழ் வெளியிட்டிருந்தது. தலையில் முசுலிம் போல தொப்பி அணிந்த ஒருவர் மகிழுந்தில் குண்டுவைக்கிறார். இந்துக்கள் போல் வேடமிட்டு இரண்டு இளைஞர்கள் பசுக்களை விலை கொடுத்து வாங்குகின்றனர். அதில் ஒரு பசுவைக் கொன்று இறைச்சி எடுக்கின்றனர். இவ்வாறான காட்சிகளில் விரியும் இப்படத்தில் பார்வையாளருக்கு சில கருத்துக்களை ஆழமாக மனதில் பதியவைக்கிறது. அதாவது., முசுலிம்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாகிறது. இதற்கு காங்கிரசுதான் காரணம். நாட்டையும் இந்து மதத்தையும் காப்பாற்ற பா...வுக்கு வாக்களியுங்கள் என்ற கருத்து அழுத்தமாக இருந்தது. ஆனாலும், .பியில் அவர்களால் வெல்ல முடியவில்லை.இத்தகைய பயங்கரமான மதவாதக் கட்சி அடுத்தடுத்து இந்தியாவில் மாநில ஆட்சியைக் கைப்பற்றுவது நல்லதா?, உறுதியாக இல்லவே இல்லை.

இப்போது கருநாடகத் தேர்தலில் இலவசத் திட்டங்களை அறிவித்தும் சோனியாகாந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட அரசியல் பேராளர்கள் பரப்புரையாற்றியும் 224 இடங்களில் பா... 110 இடங்களைப் பெற்றுப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. மக்களை வளர்க்கும் பொருளாதாரத் திட்டங்களோ சமூகத்தை முன்னேற்றும் முற்போக்குக் கொள்கைகளோ பா...விடம் இல்லை. மாறாக மத வெறியைத் தூண்டிவிடுவது மட்டுமே மிக முக்கியமான குறிக்கோள். ஆனாலும் காங்கிரசு நடுவண் அரசில் ஆட்சி செய்யும் காலக்கட்டத்திலேயே மார்ச் 2007-இல் பஞ்சாபிலும் உத்தர்கண்டிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு மாநிலத்திலும் காங்கிரசு தோற்றது. பா.. வென்றது. இதற்குக் காரணம் காங்கிரசின் உட்கட்சி மோதலே என்று கூறப்பட்டது. கருநாடகத்தில் பா... வென்றதற்குப் பெரிய கொள்கை ஒன்றும் கிடையாது. காங்கிரசிற்கான மாற்று என்றே மக்கள் நினைக்கின்றனர். எனவே, காங்கிரசின் தோல்வி என்பது மத நல்லிணக்கத்தின் தோல்வி என்றே கருதலாம்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை காப்பாற்றுவதற்கு மதவாதமற்ற கட்சிகளை ஒன்றிணைப்பது தேவை. அந்தப் பணியை காங்கிரசு செய்துவந்தது. ஆனாலும், பொருட்களின் விலைவாசி உயர்வானது மக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கியிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு ஓர் ஆண்டே உள்ளநிலையில் கருநாடகத்தேர்தல் முடிவைக் கண்டு, அத்வானியும் இராச்நாத்சிங்கும் கொக்கரிக்கிறார்கள்.

பெரியார் பிறந்த மண்ணில் வகுப்புவாதம் நுழையாது என்று கூறப்படும் தமிழகத்தில் பா... பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடுகிறது. இப்போதுள்ள நிலையே நீடித்தால் பா... நடுவண் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி. பா... ஆட்சியில் அத்வானிதான் பிரதமராவார். அவரைப் பற்றி நாடு அறிந்த ஒரு நிகழ்வை இங்கு நினைவு கூர்வோம்.பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உரிய இடஒதுக்கீட்டை அளிக்க வகைசெய்வதற்கு மண்டல் குழுவை பிரதமர் வி.பி.சிங் அமைத்தார். மண்டல் அறிக்கையை எதிர்த்து அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். அவர் செல்லும் வழியெங்கும் கலவரங்கள் வெடித்தன. இத்தகையநல்லவர்அத்வானி பிரதமரானால் பாபுபாய் பட்டேலின் கனவு நனவாகும். இந்நேரத்தில் காங்கிரசு தன் குறைபாடுகளைக் கண்டறிந்து அதனைப் போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நெருங்கி வரும் ஆபத்து மக்களை பாதிக்கும்.

பெரும் புரட்சிக்காக பாடுபட்டு வருவதாக மார்தட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகள், கருநாடகத்தில் பா... வெற்றிபெற்ற இச்சமயத்திலாவது வறட்டு அரசியலை விட்டுவிட்டு ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். காங்கிரசு ஆட்சிக்கு மாற்று பா... ஆட்சி என்று கருதும் மக்களின் மனப்போக்கில் மாற்றத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் கொண்டுவர முடியவில்லை. காரணம், நாட்டிற்கு ஆற்றவேண்டிய கடமைக்கும் மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைக்கும் இடையே கம்யூனிஸ்ட்களுக்கு இருக்கும் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

1951-ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட்கள், தலைவர் ஸ்டாலினைக் காண இரஷ்யாவுக்கு சென்றிருந்தனர். அப்போது, ‘பன்னாட்டுக் கடமைகளை நிறைவேற்ற நீங்கள் வந்திருப்பது சரியே, அதனை நடைமுறைப்படுத்தும்போது, நாட்டின் கடமைக்கும் உங்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைக்கும் இடையே பெரும் சிக்கல் இருக்கிறது. அந்தச் சிக்கல்களை நீங்கள் புரிந்துகொண்டீர்கள். அந்தப் புரிதலே உங்களைத் தோல்வியடைய செய்துவிட்டதுஎன்று தலைவர் ஸ்டாலின் கூறினார். இந்தியக் கம்யூனிஸ்ட் குறித்த அவரின் மதிப்பீடு இன்றும் தொடர்கிறது.

மதவாதக் கட்சிக்கு எதிராக மக்களின் மீது அக்கறைகொண்ட முற்போக்குக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.சரி, கருநாடகத்தில் பா... ஆட்சி எப்படி இருக்கும். சட்டப்பேரவையைக் கலைப்பதற்கு முன்பு ஒருவாரம் முதல்வராக இருந்த எடியூரப்பா முதலமைச்சராகிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு எடியூரப்பா தம் ஆதரவாளர்களுடன் ஒகேனக்கல் பகுதிக்கு வந்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்று காவிக் கொடி பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டார். எனவே, அவரின் ஆட்சியில் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் உள்ளது. முதற்செயல் தவறாக நடந்தால் முழுக்க தவறாகவே முடியும் என்பார்கள்.

தேசியப் பற்றுகொண்ட பா... மக்களின் மிக முக்கிய சிக்கலான குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும். தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டதும் செய்தியாளர்களுக்கு எடியூரப்பா அளித்த நேர்காணலில், கருநாடகத்தில் நிலம், மொழி, நீர் ஆகியவற்றை காக்கப் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார். இன்னும் எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமோ? பொறுப்பானவர்கள் பொறுமையுடன் இருக்கக் கூடாது.

(கருநாடகத்தில் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்ற அன்று…)

ஒக்ரோபர் 24, 2008 at 1:32 பிப 1 மறுமொழி


நாட்காட்டி

மே 2024
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Posts by Month

Posts by Category